பேராசிரியை நிர்மலா தேவியின் நீதிமன்ற காவலை மேலும் நீட்டித்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் தனியார் கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அக்கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலை கழக உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நிர்மலாதேவியை விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2 -இல் இன்று போலீஸார் ஆஜர்படுத்தினர். விசாரணையின் அடிப்படையில் நிர்மலாதேவியை ஜூலை ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்க போலீஸார் அழைத்து சென்றனர்.