மத்திய அரசின் திட்டங்களை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: சேலம் பசுமை வழிச்சாலை உள்பட மத்திய அரசு கொண்டுவரக்கூடிய எல்லா திட்டங்களையும் ரஜினிகாந்த் வரவேற்பதில் எங்களுக்கு ஆச்சரியம் இல்லை. அவர் தொடர்ந்து அந்தப் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
திமுகவைப் பொருத்தவரை பசுமை வழிச்சாலையை மாற்று வழி அல்லது மக்களைச் சந்தித்து சமாதானம் செய்து விட்டு அவர்களின் முழு சம்மதத்தோடு நிறைவேற்ற வேண்டும் என்பதுதான்.
தமிழக ஆளுநர் மீண்டும் ஆய்வு செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவரின் நிகழ்ச்சி நிரல் பட்டியலை நானும் பார்த்தேன். அந்த நிகழ்ச்சி நிரல் பட்டியலில் ஆய்வு செய்வதாக இல்லை. சில நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய நிலையில்தான் அவருடைய சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆளுநர் ஆய்வு செய்யும் நிலையில் இருந்தால் நிச்சயம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
ஜூலை 22-இல் ஆளுநரிடம் புகார்: தமிழகத்தில் நான்கு நாள்களாக நடந்து வரும் வருமான வரி சோதனை குறித்து, நாங்கள் ஒரு மனுவைத் தயாரித்து அதனை ஆளுநரிடம் வழங்குவதற்கு நேரம் கேட்டிருந்தோம். அவரும் ஜூலை 22-ஆம் தேதி காலை 11 மணிக்கு நேரம் கொடுத்திருக்கிறார். எனவே, முறையாக ஆளுநரிடம் தந்துவிட்டு அதன் பிறகு நிச்சயமாக, உறுதியாக இது குறித்து நாங்கள் நீதிமன்றத்தையும் நாட உள்ளோம் என்றார்.