விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் எஸ்பிகே நிறுவன அலுவலகத்தை பூட்டி சீல்' வைத்து, வருமானவரித்துறையினர் வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அருப்புக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சாலைப்பணி ஒப்பந்த நிறுவனமான எஸ்பிகே அண்ட்கோ' நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதனை ஒட்டியமைந்த நிறுவனர்களின் வீடுகளில் வருமானவரித் துறையினர் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 16) முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில், மதுரை மண்டல வருமானவரித்துறை இணை ஆணையர் அஜய் ராபின் தலைமையிலான சுமார் 25 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை மண்டல வருமானவரித்துறை இணைஆணையர் ஜெயராகவன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், சென்னையிலுள்ள எஸ்பிகே அண்ட் கோ கிளையின் 4 நிறுவனர்களில் ஒருவரான நாகராஜனையும் உடன் அழைத்துக்கொண்டு வியாழக்கிழமை இரவு அருப்புக்கோட்டை வந்தனர். பின்னர், விடியவிடிய சோதனை தொடர்ந்தது.
பின்னர், கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்கள் பற்றி, செய்யாத்துரையின் மகன்களும், எஸ்பிகே அண்ட் கோ நிறுவனர்களுமான பாலசுப்பிரமணி, கருப்பசாமி மற்றும் நாகராஜன் ஆகிய 3 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்நிறுவனர்களின் பிற நிறுவனங்களான காரியாபட்டி பஞ்சாலை, கமுதி அருகே உள்ள கல்குவாரி மற்றும் கீழமுடிமன்னார்கோட்டையிலுள்ள வீடு ஆகிய இடங்களில் வருமானவரித் துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நிறுவன ஊழியர்களிடத்தில் தனித்தனியாக திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக தெரிகிறது. அப்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பாடான பதிலளித்தனர். இதனால் அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இரவு 8 மணி அளவில் எஸ்பிகே அண்ட் கோ நிறுவன அலுவலகத்தை சென்னையிலிருந்து வந்திருந்த மண்டல இணை ஆணையர் குழுவினர் பூட்டி சீல்' வைத்தனர். பின்னர், நாகராஜனை மட்டும் அழைத்துக் கொண்டு அக்குழுவினர் சென்னை புறப்பட்டனர். ஆனால், மதுரை மண்டல வருமானவரித்துறையினரின் சோதனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.