சிற்பி அறக்கட்டளை சார்பில் கவிஞர் மகுடேசுவரனுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான "சிற்பி இலக்கிய' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கவிஞர் சிற்பி அறக்கட்டளைத் தலைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிற்பி அறக்கட்டளை சார்பில் கடந்த 23 ஆண்டுகளாக இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2018-ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது கவிஞர் மகுடேசுவரனுக்கு வழங்கப்பட உள்ளது. எழுத்தாளர், பேச்சாளர், மொழி ஆய்வாளர், இலக்கண அறிஞர் என பன்முகம் கொண்ட இவர், 13 கவிதைத் தொகுப்புகளுடன் கட்டுரை நூல்கள் பல அளித்துள்ளார்.
சிற்பி அறக்கட்டளையின் பொ.மா.சுப்பிரமணியம் விருது மணல் வீடு ஹரிகிருஷ்ணனுக்கு வழங்கப்பட உள்ளது. எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், மணல் வீடு இதழின் ஆசிரியராக ஹரிகிருஷ்ணன் உள்ளார்; நாட்டுப்புறக் கூத்து, மரப்பாவை, தோற்பாவைக் கூத்து முதலிய கலைகளை ஹரிகிருஷ்ணன் ஆவணப்படுத்தி வருகிறார். மேலும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவும் நற்பணிகளையும் இவர் செய்து வருகிறார்.
ஆகஸ்ட் 11-இல் விழா: பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் வரும் ஆக. 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பரிசுகளை வழங்குகிறார். விருது பெறுவோரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வாழ்த்தி உரையாற்றுகிறார். "காலத்தை வென்ற மூலன்' என்ற தலைப்பில் தத்துவ அறிஞர் முனைவர் கரு.ஆறுமுகத் தமிழன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.