சென்னை மாதவரத்தில், ஜைன சமய தலைமை ஆசார்யர் மஹாஸ்ரமன் தமது சாதுர்மாஸ்ய விரதத்தை சனிக்கிழமை தொடங்கினார். இதன் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
சென்னை மாதவரம் தட்டான்குளம் அருகில், ஜைனத் தேராபந்த் நகரில் ஜைன சமய சங்கம் உள்ளது. இச்சங்கத்தின் ஸ்வேதாம்பர தேராபந்த் பிரிவைச் சேர்ந்த தலைமை ஆசார்யர் மஹாஸ்ரமன். இவர் தனது சீடர்களுடன் சாதுர்மாஸ்ய விரதப் பயணத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு தில்லி செங்கோட்டையில் இருந்து தொடங்கினார். இந்தப் பயணத்தின்போது, பொதுமக்களிடம் நன்னெறி, நல்லெண்ணம், போதைப்பொருள்களை முற்றிலும் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் போன்ற அறச்செய்திகளைப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இப்பயணம், சனிக்கிழமை (ஜூலை 21) சென்னை மாதவரத்தை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து, சாதுர்மாஸ்ய விரதத்தை ஆசார்யர் மஹாஸ்ரமன் மாதவரத்தில் தொடங்கினார். இதன் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியது: சென்னையில் புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஜெயின் சமுதாய மக்கள் ஓடோடி வந்து உதவிகள் செய்தனர். அப்படிப்பட்ட ஜெயின் சமூகத்தினருக்கு என்றென்றும் அன்புடையவர்களாக நாங்கள் இருப்போம் என்றார்.
இந்த விழாவில், அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, எம்எல்ஏக்கள் சிறுணியம் பலராமன், நரசிம்மன், விஜயகுமார், குருசாமி, மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், காவல்துறை கூடுதல் ஆணையர் ஜெயராம், துணை ஆணையர் சி.கலைச்செல்வன், உதவி ஆணையர்கள் ராமலிங்கம், பிரபாகர், பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சாதுர்மாஸ்ய விரதம் ஜூலை 28-ஆம் தேதி வரை நடைபெறும் என ஜைன சமூக சங்கத்தினர் தெரிவித்தனர்.