திரையரங்குகளில் வாகன நிறுத்தக் கட்டணம் தொடர்பாக திரைத் துறையைச் சேர்ந்த அனைத்து தரப்பினருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு சனிக்கிழமை கூறியது: திரையரங்குகளில் தின்பண்டங்கள், வாகன நிறுத்தக் கட்டணம் அதிகம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரிந்துரையில் உள்ளது. இதுகுறித்து திரைத் துறையைச் சேர்ந்த அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு காணப்படும்.
நான்காண்டு கால பாஜக அரசின் அமைச்சரவையில் பங்குபெற்ற தெலுங்கு தேசம் கட்சி மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு நாம் ஆதரவு அளிக்க முடியாது. நம்பிக்கையில்லா தீர்மானம் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னைக்காக அல்ல; ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தே அத்தீர்மானத்தைக் கொண்டு வந்தனர் என்றார் அவர்.