உலக அளவில் ஆன்மிகத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டியவர் விவேகானந்தர் என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் எழுதிய "விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்' , "மனிதனுக்கு மரணமில்லை' ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், உலக சமுதாயத்துக்கு யார் வழிகாட்டியாகத் திகழ்கிறாரோ அவர்தான் உண்மையான துறவி. சிகாகோ மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய உரைதான் உலக அளவில் ஆன்மிகத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டியது என்றார்.
"விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர் ' எனும் நூலை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிட யுஆர்சி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சி.தேவராஜன் பெற்றுக் கொண்டார். "மனிதனுக்கு மரணமில்லை' எனும் நூலை இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட இந்து கல்வி நிலையத் தலைவர் கே.கே.பாலுசாமி பெற்றுக் கொண்டார்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சண்முகம் சரவணன் முன்னிலை வகித்தார்.
நூலாசிரியர் த.ஸ்டாலின் குணசேகரன் ஏற்புரையாற்றினார்.