சென்னை: நான்காவது நாளாக இன்று திங்கள்கிழமை தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை கோயம்பேடு சந்தைக்கு வேன்கள், சிற்றுந்து, பேருந்துகள் மூலம் காய்கறிகள் கொண்டு வரப்படுவதால், காய்கறிகளின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
டீசல், பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளாக நடைபெற்று வரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
கோயம்பேடு சந்தை: சென்னை, கோயம்பேடு சந்தைக்கு ஒட்டன்சத்திரம், நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் சுமார் 350 -க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் 7,000 டன்னுக்கு மேற்பட்ட காய்கறிகள், பூக்கள், பழங்கள் கொண்டு வரப்படுவது வழக்கம்.
"லாரிகள் வேலைநிறுத்தத்தால் கோயம்பேடு சந்தைக்கு வழக்கம்போல் வரவேண்டிய காய்கறிகள் லாரிகள் வரத்து குறைந்துள்ள நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வியாபாரிகள் சிற்றுந்து, பேருந்து மூலம் காய்கறிகளைக் கொண்டு வந்தனர்.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சின்ன வெங்காயம், தேங்காய் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது.
நான்காவது நாளாக தொடரும் லாரிகளின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் சாரக்கு லாரிகள் இயக்கப்படாததால், 7 லட்சம் ஓட்டுநர்கள் வேலை இழந்துள்ளனர். கோடிக்கணக்கான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. சென்னையில் முட்டை ரூ.7 வரை விற்கப்படுவதாகவும், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.