புது தில்லி: இனி ரயில் பெட்டிகளில் சாப்பாட்டுக்குப் பிறகு குப்பைப் பொருட்களை சேகரிக்க ஊழியர்கள் நேரடியாக பைகளை கொண்டு பயணிகளின் இடத்திற்கே வருவார்கள் என்று ரயில்வே வாரியத் தலைவர் கூறியுள்ளார்.
ரயில்வே கோட்ட அளவிலான உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ரயில்வே வாரிய உறுப்பினர்கள் கூட்டம் தில்லியில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி பேசியதாவது:
விமானத்தைபோல, இனி ரயில் பெட்டிகளிலும், சாப்பாட்டுக்குப் பிறகு குப்பைப் பொருட்களை சேகரிக்க ஊழியர்கள் தனியாக பைகளைக் கொண்டு வருவார்கள்.
ஒவ்வொரு பயணிகளிடத்திலும் வந்து நேரடியாக குப்பைகளைக் கேட்டுப் பெற்றுச்செல்வார்கள். பயணிகள் சாப்பிட்ட பின் வைத்திருக்கும் ட்ரே, தட்டுகள் அல்லது எந்த ஒரு உதிரி குப்பைகள் என்றாலும் அவற்றை ஊழியர்கள் சேகரித்துச் செல்வார்கள்.
ஒருவேளை சில ரயில்களில் கேண்டீன் ஊழியர்கள் இருக்க வாய்ப்பில்லை என்றால் அத்தகைய ரயில்களில் துப்புரவு பணியாளர்கள்தான் பைகளை பயணிகளிடம் எடுத்துச் சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும். குப்பை சேகரிப்பு பைகள் குறித்த விவகாரமானது இப்போது வழக்கமான கேண்டீன் ஒப்பந்தங்களோடு இணைத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.