சென்னை: துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் இருவர் சனிக்கிழமையன்று நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு செய்ய உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாயன்று துவங்கி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட திங்களன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் இருவர் சனிக்கிழமையன்று நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு செய்ய உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் ஜெயச்சந்திரன் மற்றும் மோகன்தாஸ் ஆகிய இருவரும் நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று சம்பவ இடங்களில் ஆய்வு செய்வார்கள்.
துப்பாக்கிச் சூடு பற்றி மட்டும் அல்லாமல் போராட்டகாரர்கள் மீதான பொய் வழக்குகள், சட்டவிரோதமாக அடைத்து வைத்த விவகாரம் மற்றும் இதர மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரிப்பார்கள்.
அத்துடன் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களையும் அவர்கள் நேரடியாக விசாரிப்பார்கள் என்று தெரிகிறது.