சென்னை: சபாநாயகர் பதவி என்றால் எவ்வளவு கஷ்டம் தெரிகிறதா என்று திமுக கொறடா சக்கரபாணியை, சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கிண்டல் செய்ததால் அவை சிரிப்பலையில் மூழ்கியது.
தூத்துக்குடி சமபவத்தில் தமிழக அரசைக் கண்டித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவை புறக்கணிப்பு செய்தனர். அத்துடன் தமிழக அரசுக்கு புத்தி புகட்டும் வகையில், 'மாதிரி சட்டப்பேரவை' கூட்டத்தினையும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாத இறுதியில் நடத்திக் காட்டினார்கள். இந்த மாதிரி சட்டப்பேரவையில் திமுக கொறடாவான சக்கரபாணி சபாநாயகராக பணியாற்றினார்.
இந்நிலையில் அவை புறக்கணிப்பைக் கைவிட்ட திமுகவினர் திங்களன்று அவைக்குத் திரும்பினர். அவையில் கேள்வி நேரத்தின் பொழுது, தனது தொகுதியில் வனச் சாலை அமைப்பது குறித்து சக்கரபாணி கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதில் அளித்துப் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இந்த் கேவிக்கு கடந்த 30-ஆம் தேதி முதல்வர் பதிலளித்து விட்டதாகவும், அப்பொழுது நீங்கள் மாதிரி சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்தீர்கள் என்றும் தெரிவித்தார்.
அப்பொழுது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், 'சபாநாயகர் பதவி என்றால் எவ்வளவு கஷ்டம் தெரிகிறதா?' என்று சக்கரபாணியை நோக்கி கேள்வி எழுப்பியதால் அவை சிரிப்பலையில் மூழ்கியது.