நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்த விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 2016-17-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பில் 1,1125 மதிப்பெண்கள் பெற்றார்.
மருத்துவப் படிப்பை பயில விரும்பிய பிரதீபா கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய நீட் தேர்வில் 159 மதிப்பெண்கள் மட்டும் பெற்றதால் அவருக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரிகளில் படிக்கவும் போதிய வசதியில்லாததால் ஓராண்டு பயிற்சி பெற்று நடப்பாண்டில் மீண்டும் தேர்வெழுதினார்.
இதில் கடந்த ஆண்டைவிட குறைந்த மதிப்பெண் கிடைத்ததால் மீண்டும் அரசு ஒதுக்கீட்டில் கிடைக்க வாய்ப்பில்லை என்று எண்ணி மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
பிரதீபாவின் மரணத்துக்கு நீட் தேர்வு தான் காரணம் என்று கூறி பிரதீபாவின் உறவினர்கள் மனமுடைந்தனர். இந்நிலையில், பிரதீபாவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு அவர்களது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பிரதீபாவின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமானால் 3 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் முன்வைத்துள்ளனர்.
அதாவது, உயிரிழந்த பிரதீபா குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவேண்டும். அவரது குடும்பத்தினர் யாரேனும் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்கும் வரை பிரேத பரிசோதனைக்கு கையெழுத்திட மாட்டோம் என்று பிரதீபாவின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால், அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.