மதுரை: ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே எதிர்க்கிறார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் ஜூன் 7 அன்று வெளிவருகிறது. இந்தப் படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் காலா திரைப்படத்திற்கு தடை கோரி ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே எதிர்க்கிறார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே எதிர்க்கிறார்கள். அவ்வாறு ஒரு படைப்பின் உள்ளடக்கம் என்ன என்று தெரியாமலே அதனை எதிர்ப்பது என்பது அறிவுடையோர் செயல் கிடையாது. முதலில் படம் வெளிவரட்டும். பிறகு அதில் உள்ள விஷயங்களில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் எதிர்க்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.