தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி கிராம மக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தின் 100-ஆவது நாளில் ஆயிரக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர்.
அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க கடந்த மாதம் 30-ஆம் தேதி தூத்துக்குடி சென்றார். அங்கு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவியும் வழங்கினார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம் என்று கூறினார்.
சமூகவிரோதிகள், விஷகிருமிகள் என்று ரஜினி கூறியது தமிழகம் முழுவதும் எதிர்ப்பலையை கிளப்பியது.
இதையடுத்து, ரஜினி நடித்த காலா திரைப்படம் பல இன்னல்களுக்குப் பிறகு இன்று (வியாழக்கிழமை) வெளியானது. இந்நிலையில், ரஜினி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ஒசூரைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி கூறியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.