அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உயிரிழந்த பிறகு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக சசிகலா பொதுக்கூட்டத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பிறகு, கட்சியில் பிளவு ஏற்பட கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டி பொதுச்செயலாளர் பதவியை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.
அதே சமயம் அதற்கு இணையான அதிகாரம் உள்ள வகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என 2 புதிய பதவிகளை அறிமுகம் செய்தனர். அதன்படி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதற்கான தீர்மானத்தை இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்காக கட்சி விதிகளில் அவர்கள் திருத்தம் மேற்கொண்டனர்.
இதையடுத்து, கட்சியில் மாற்றப்பட்ட புதிய விதிகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக-வில மாற்றப்பட்ட புதிய விதிகளுக்கு ஒப்புதல் வழங்கி அனுமதி தந்துள்ளது.