செஞ்சிக்கோட்டை மலையடிவார வயல்வெளியில், போரின் போது பயன்படுத்தப்பட்ட பீரங்கி கல் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
செஞ்சிக்கோட்டை பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள், மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என ஆண்ட வரலாற்றுச் சிறப்புப் பெற்றது. செஞ்சிக்கோட்டை கருங்கல்லில் கலைநயத்துடன் கட்டப்பட்டு, இன்றளவும் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது.
இந்த செஞ்சிக்கோட்டை மலையடிவாரப் பகுதியில் உள்ள வயல் வெளியில் பீரங்கியில் செலுத்தித் தாக்கும் கல் குண்டுகள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
சுமார் அரை கிலோ எடையுள்ள 7 கல் குண்டுகளை பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.
இதுகுறித்து செஞ்சியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் முனுசாமி கூறியதாவது: தேசிங்குராஜனுக்குப் பிறகு செஞ்சிக்கோட்டையை சாதத்துல்லாகான் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சியின்போது, பிரெஞ்சுப் படைகள் இரவோடு இரவாக தாக்குதல் நடத்தி செஞ்சிக்கோட்டையை கைப்பற்றின. கடந்த 1761-இல் பிரெஞ்சுக்காரர்களை வீழ்த்தி ஆங்கிலேயர்கள் செஞ்சிக்கோட்டையை கைப்பற்றினர். அப்போது நடைபெற்ற போரில்தான் செஞ்சிக்கோட்டை மலையில் இருந்து பீரங்கிகளை பயன்படுத்தி உள்ளனர்.
போரின்போது, சிறியது முதல் பெரியது வரையிலான பீரங்கிகள் பயன்படுத்தப்படுவதுண்டு. சுமார் 10 கல் குண்டுகளை ஒரே சமயத்தில் பீரங்கியில் செலுத்தித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த வகை குண்டுகள் சிறிய ரக பீரங்கிகளில் பயன்படுத்தப்பட்டவை என்றார்.