சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்ததாக நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றம் வரையிலும் மறுக்கப்பட்ட போதிலும், அவரை இன்னும் தமிழக போலீசார் கைது செய்யவில்லை. ஐம்பது நாட்களைக் கடந்தும் அவர் இன்னும் கைது செய்யப்படாமலதான் இருக்கிறார்.
இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்பொழுது நடந்து வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்திலும் எஸ்.வி.சேகர் விவகாரம் எதிரொலித்தது.பேரவையில் புதனன்று எஸ்.வி.சேகர் விவகாரம் குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் முயன்றார். ஆனால் அவருக்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் பேரவையில் சபாநாயகர் தனபால் பேசும் பொழுது, 'நடிகர் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்பதே எனது கேள்வி. நாம் அனைவரும் வரும் 20-ஆம் தேதி வரை பொறுத்திருக்கலாம். அன்றுதான் அவரை நீதிமன்றம் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
பேரவை நடைபெறும் பொழுதெல்லாம் வழக்கமாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராவது வழக்கம். ஆனால் எஸ்.வி.சேகர் விவகாரத்தின் பொழுது அவர் பேரவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.