பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் 3-ஆவது நாளாக இன்று (புதன்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம், இந்த அமைப்பினர் வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஊதிய முரண்பாடு தொடர்பாக குழு அமைத்து புதிய சமரச திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் குழுவின் பரிந்துரையை இதுவரை அரசு வெளியிடவில்லை.
இதையடுத்து, திட்டமிட்டப்படி சென்னை சேப்பாக்கத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் தொடங்கினர்.
இதில் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அவர்களின் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், இன்று மாலை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திடீரென தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றனர். இதையடுத்து, பேரணி சென்றவர்களை போலீஸார் காமராஜர் சாலையில் கைது செய்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
போலீஸாரின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து அவர்கள் காமராஜர் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.