சென்னை: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று வீட்டு வாடகை தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய அவர், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக காவல்துறை வாயிலாக தமிழக அரசுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது:
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி ஒரு தீர்ப்பும் நீதிபதி சுந்தர் மற்றொரு தீர்ப்பும் வழங்கினார்கள். நீதிமன்றத் தீர்ப்பினை ஒருவர் விமர்சிக்கலாம். ஆனால் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துக்களை பலர் தெரிவித்தனர். வன்மையான கண்டனங்களும் எழுப்பட்டது.
இவ்வாறு நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தோர் மீது காவல்துறையால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? புகார்கள் வரவேண்டும் என்று காத்திருக்கிறீர்களா?
இவ்வாறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி கிருபாகரன் இதுதொடர்பாக இரண்டு வாரத்திற்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.