ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2-ஆவது நாளாக திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி மேற்கொள்ளவும் தடை நீட்டிக்கப்பட்டது. மேலும், அருவிக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில், கபினி அணை தனது முழுக் கொள்ளவை எட்டிய நிலையில், அந்த அணையின் பாதுகாப்புக் கருதி, உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது. அன்று மாலை நிலவரப்படி நொடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், கபினி அணையில் நீர் திறப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திங்கள்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 26 ஆயிரம் கனஅடியாகச் சரிந்தது. ஒகேனக்கல் அருவிக்கு வருகிற நீர்வரத்தை மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செல்லவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டது.