திருச்சியில் முதல்வருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் போலீஸாரின் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி கூட்டத்தில் நுழைந்து முதல்வரை நோக்கி முன்னேறினார். பின்னர், போலீஸார் அவரை பிடித்து கூட்டத்துக்கு வெளியே கொண்டு வந்தனர். அவர் ஒரு முக்கிய பிரமுகரின் பெயரையும், வழக்குரைஞர் ஒருவரின் பெயரையும் கூறி அவர்களுக்கு வேண்டியவர் எனவும் கட்சியைச் சேர்ந்தவர் எனவும் மாறி மாறி கூறியதால் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவரை விமான நிலைய காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
அதில், அவர் நாகப்பட்டிணம் கோபுரவாசல்படி, பெரம்புக்கரைத் தெருவைச்சேர்ந்த உலகநாதன் மகன் சபரிநாதன் (25) எனவும், வரவேற்க வந்த கட்சியினருடன் வந்ததாகவும் முதல்வரை அருகில் காணவேண்டும் என்ற ஆர்வத்தில் சென்றதாக அந்த இளைஞர் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் போலீஸ் மயக்கம்: முதல்வரின் வருகையையொட்டி, நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் வருவதற்கு சுமார் அரை மணி நேரம் முன்பு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவருக்கு சக காவலர்கள் முதலுதவி செய்து மருத்துவ மையத்துக்கு கொண்டு சென்றனர்.