மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
கபினியில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்ததால், ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5.05 அடி உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரளத்தில் வயநாடு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கபினி அணை நிரம்பியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி கபினியிலிருந்து உபரிநீர் காவிரியில் கடந்த 14-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு வந்தது. உபரி நீரானது ஞாயிற்றுக்கிழமை முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது. நீர்வரத்து காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 847 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து திங்கள்கிழமை காலை நொடிக்கு 32,421 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்ததால் ஞாயிற்றுக்கிழமை காலை 40 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 45.05 அடியாக உயர்ந்தது. ஒரேநாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5.05 அடி உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 14.83 டி.எம்.சி. கபினியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்திருப்பதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.