சென்னை: மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது, தமிழகத்தின் மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தரும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோப்பூரில் 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன மருத்துவமனை அமைய உள்ளது. இங்கு சுமார் 100 மருத்துவர்களுக்கான பணி ஏற்படுத்தப்படும்.
தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட 5 மாவட்டங்களை பார்வையிட்ட ஆய்வுக் குழுவினர், மதுரையைத் தேர்வு செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முன் வந்துள்ளது என்று முதல்வர் கூறியுள்ளார்.