புது தில்லி: மிக விரைவில் எங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவக்கிய கமல்ஹாசன் அதனை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி மனு செய்திருந்தார். அதற்கான ஆவணங்களையும் அவர் முன்னரே தாக்கல் செய்திருந்தார். இதற்கு யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறி அவகாசம் வழங்கி இருந்தது.
அதன் தொடர்ச்சியாக புதனன்று மக்கள் நீதி மய்யதிற்கு முறைப்படி அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக துணைத் தேர்தல் ஆணையரை சந்திக்க, கமல்ஹாசன் தனது கட்சியின் உயர் மட்டக் குழு உறுப்பினர்களுடன் தில்லி வந்திருந்தார். அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஆணையம் கேட்ட ஆவணங்களையும் முன்னரே தாக்கல் செய்திருந்தோம். தற்பொழுது மேலும் சில கூடுதல் தகவல்களை கேட்டிருந்தார்கள். அதற்கும் உரிய விளக்கங்களை அளித்தோம். பொதுவாக எங்களுக்கு எந்தப் பெரிய ஆட்சேபனையும் இல்லை.
கூடிய விரைவில் உங்களுக்குத் தேவையான அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள். அது 7 நாட்களாகவும் இருக்கலாம் அல்லது பத்து நாடகளாகவும் இருக்கலாம். எங்களுக்குத் தெரியவில்லை. சின்னம் குறித்து அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை. முதலில் எங்களுக்குள் ஆலோசித்து விட்டு பிறகு சரியான சமயத்தில் அவர்களைத் தொடர்பு கொள்ளுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.