சென்னை: பசுமைவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நடத்த உள்ளதாக அறிவித்துள்ள போராட்டம் தேவையற்றது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்பொழுது சேலம்- சென்னை 8 வழி பசுமைவழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நடத்த உள்ளதாக அறிவித்துள்ள போராட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:
திமுக நடத்த உள்ளதாக அறிவித்துள்ள போராட்டம் தேவையற்றது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு மிகவும் முக்கியம். முன்பு பெரும்பாலான இடங்களில் 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டவுடன் விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. அவை அநேகமாக 100 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. கிழக்குக் கடற்கரை சாலையினை அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கூறலாம். .
இத்தகைய திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்துகள் இருக்குமானால், அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களை சந்தித்து தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறலாம்.
அரசின் திட்டங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான்; அரசின் நன்மைக்காக இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.