சென்னை: கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலின் பொழுது திருப்பூர் அருகே கண்டெய்னரில் ரூ.570 கோடி பிடிபட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தில் திமுக புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சமயத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், அதன் கோவை கிளையில் இருந்து விசாகப்பட்டினம் கிளைக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் என்றும் தகவல்கள வெளியாகின
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி திமுக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதல்நிலை விசாரணை முடித்து சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. அப்போது, பணம் கொண்டு வரப்பட்ட கண்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் போலியானவை என்று சி.பி.ஐ விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், ரூ.570 கோடிப் பணம் வங்கிப் பணம் என்று சிபிஐ கடந்த ஆண்டு ஜுலை மாதம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரூ.570 கோடி பிடிபட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தில் திமுக புதிய மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளது.
திமுக சார்பாக அதன் வழக்கறிஞர் வில்சன் வியாழன் அன்று உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரனைஅறிக்கையினை தங்கள் தரப்புக்கு வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவினை விசாரித்த நீதிபதி சுப்பையா, அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் பொழுது திமுகவின் மனுவினை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.