மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு நிகழாண்டுக்கான அவ்வையார் விருதை முதல்வர் பழனிசாமி புதன்கிழமை வழங்கினார்.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-பெண்கள் மேம்பாடு, சமூக சீர்த்திருத்தம் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் பெண்களுக்கு அவ்வையார் விருது கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டுக்கான விருது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பிள்ளை பெருமாளுக்கு வழங்கப்பட்டது. களஞ்சியம் பெண்கள் சுய உதவிக் குழு அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்று கடந்த 30 ஆண்டுகளாக கிராமப்புற ஏழைப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றி வருகிறார்.
சின்னப்பிள்ளை பெருமாளின் பணிகளைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் அவ்வையார் விருது அளிக்கப்பட்டுள்ளது. அவர் இதுவரை 2,589 சுய உதவிக் குழுக்களை உருவாக்கி கிராமப்புற பெண்களின் வாழ்வை வெற்றிகரமாக மாற்றினார். அவரது மகளிர் மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டி 2000-ஆம் ஆண்டு மத்திய அரசானது, ஸ்ரீசக்தி புரஸ்கார் விருது வழங்கியது.
இப்போது, தமிழக அரசின் சார்பில் ரூ.1 லட்சம் காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் அடங்கியுள்ள அவ்வையார் விருதினை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஆசி பெற்ற வாஜ்பாய்: மத்திய அரசின் விருதினை 2000-ஆம் ஆண்டு சின்னப்பிள்ளை பெற்ற போது, பிரதமராக வாஜ்பாய் இருந்தார். அவர் அந்த விருதினை சின்னப்பிள்ளைக்கு வழங்கும் போது, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆச்சரிய ஆலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.