வெடிகுண்டு வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்ற முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

வெடிகுண்டு தொடர்பான வழக்குகளை நேரடியாக பூந்தமல்லி மற்றும் கோவையில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களுக்கு, குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதிகள் மாற்றம் செய்ய முடியாது என சென்னை உயர்
வெடிகுண்டு வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்ற முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

வெடிகுண்டு தொடர்பான வழக்குகளை நேரடியாக பூந்தமல்லி மற்றும் கோவையில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களுக்கு, குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதிகள் மாற்றம் செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சிவகங்கையில் கடந்த 2007 -ஆம் ஆண்டு காரில் பயணம் செய்து கொண்டிருந்த முருகன் என்பவர், வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். 
இதுகுறித்து சிவகங்கை போலீசார் வழக்குப் பதிவு செய்து பலரைக் கைது செய்தனர்.
வெடிகுண்டு வழக்கு என்பதால் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன், அந்த வழக்கை பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு, சிவகங்கை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி நேரடியாக அனுப்பி வைத்தார்.
நீதிமன்ற முடிவை எதிர்த்து வழக்கு: இதை எதிர்த்து இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவான வெடிகுண்டு வழக்கை, கோவையில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதே போன்று வேறு சிலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். 
உத்தரவு: இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
வெடிகுண்டு வழக்குகளை பூந்தமல்லி மற்றும் கோவையில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களுக்கு குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதிகள் நேரடியாக மாற்ற முடியாது. 
தங்களுடைய மாவட்டத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்குத்தான் அவர்கள் அனுப்ப வேண்டும். மாவட்ட முதன்மை நீதிபதி தான், இந்த வெடிகுண்டு வழக்குகளை யார் விசாரிப்பது என்பதை முடிவு செய்ய முடியும். 
எனவே, அவ்வாறு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும், அந்தந்த மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு பூந்தமல்லி மற்றும் கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் அனுப்பி வைக்க வேண்டும். 
அந்த வழக்குகளை அந்தந்த மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள் விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com