தூத்துக்குடியில் கலவரத்தைத் தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பின் சட்ட ஆலோசகர் கைது

தூத்துக்குடியில் கலவரத்தைத் தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பின் சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடியில் கலவரத்தைத் தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பின் சட்ட ஆலோசகர் கைது

தூத்துக்குடியில் கலவரத்தைத் தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பின் சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடியில் கடந்த மே 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திலும், மறுநாள் நடைபெற்ற கலவரத்திலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக 250-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். போராட்டம், கலவரத்தைத் தூண்டியதாக பலரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் சட்ட ஆலோசகரும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளருமான வாஞ்சிநாதனை தனிப்படை போலீஸார் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
இதையடுத்து, அவரை தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை அழைத்து வந்தனர். அவரிடம் போலீஸார் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். போராட்டத்தின்போது மக்களிடம் பேசிய விவரங்கள், கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசியது ஆகியவை தொடர்பாக தங்களிடமுள்ள ஆவணங்களைக் காண்பித்து அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வாஞ்சிநாதன் மீது சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, தூத்துக்குடி மூன்றாவது நீதித்துறை நடுவர் தமிழ்ச்செல்வி முன் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, வாஞ்சிநாதனை போலீஸார் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com