அரசு கலை -அறிவியல் கல்லூரிகளுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை இடங்களை 20 சதவீதம் அதிகரித்துக் கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
குறைந்துவரும் ஆர்வம்: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கை, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல் பி.இ. படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதே நேரம், கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் இந்த நிலை தொடர்கிறது.
சென்னை மாநிலக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி போன்ற கல்லூரிகளில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டு, 500 முதல் 1,000 விண்ணப்பங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கலை -அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதால், ஒப்பளிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக 20 சதவீத இடங்களில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் அரசு அனுமதி அளித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து நிகழ் கல்வியாண்டிலும் (2018-19) 20 சதவீத கூடுதல் இடங்களில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து அண்மையில் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழகத்திடம் அனுமதி: இந்த 20 சதவீத கூடுதல் இடங்களை நிரப்பிக்கொள்ள தொடர்புடைய பல்கலைக்கழகத்திடம் கல்லூரிகள் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.