நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்னைப் பள்ளிகளின் 8 மாணவர்கள் கல்விச் சுற்றுலா

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு கல்விச் சுற்றுலா செல்ல சென்னைப் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவிகள் உள்பட 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு கல்விச் சுற்றுலா செல்லும் சென்னை பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு கல்விச் சுற்றுலா செல்லும் சென்னை பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு கல்விச் சுற்றுலா செல்ல சென்னைப் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவிகள் உள்பட 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியரின் தனித்திறனை வெளிக் கொணர்வதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியும், சென்னை ரோட்டரி சங்கம் கிழக்கும் இணைந்து விங்ஸ் டு பிளை' திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் சென்னைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூன்று சுற்றுகளாக அறிவியல் போட்டிகளை நடத்தின. 
8 மாணவர்கள் தேர்வு: இதன் இறுதிச் சுற்றில் கோயம்பேடு மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர் எஸ்.ராஜ்குமார், 8-ஆம் வகுப்பு மாணவர் ஆர்.கோபிநாத், அண்ணா நகர் புல்லா அவென்யூவைச் சேர்ந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி எஸ்.பிரேமா, சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 1 மாணவர் ஜி.யோகேஷ், தேனாம்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவர் ஐ.ஆதவன், அர்தூன் சாலை உயர்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர் டி.சுபாஷ், கொய்யாத்தோப்பு உயர்நிலைப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவி பி.ரோஸ் மேரி, அயனாவரம் மேல்நிலைப் பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவி டி.காவ்யாஞ்சலி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நாசாவுக்கு கல்விச் சுற்றுலா: இவர்களை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு ஜூலை 4-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை மாநகராட்சி நிர்வாகமும், சென்னை ரோட்டரி சங்கம் கிழக்கும் இணைந்து இந்த கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கின்றன. மாணவர்களுக்கு உதவியாக உதவிக் கல்வி அலுவலர் டி.ரோகிணி, சென்னை ரோட்டரி சங்கம் கிழக்கு உறுப்பினர்கள் இருவரும் உடன் செல்கின்றனர். 
அமெரிக்கா செல்லும் இம் மாணவர்கள் சென்னையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், துணை ஆணையர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
இதேபோல், கடந்த 2017-ஆம் ஆண்டு 7 மாணவ, மாணவிகள் ஜெர்மனி நாட்டுக்கும், கடந்த 2016-ஆம் ஆண்டு 7 மாணவ, மாணவிகள் மலேசியாவுக்கும் மாநகராட்சி சார்பில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com