சர்கார்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்' புகைப்பது போன்று தோன்றியுள்ளதற்கு நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலக்ஸாண்டர், மாநில கண்காணிப்புக் குழுவுக்கும், இந்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விஜய்யின் புதிய படமான சர்கார்' திரைப்படத்தின் சுவரொட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அவர் புகைப்பது போன்று தோன்றியுள்ளார். இது புகையிலை விளம்பர தடைச் சட்டத்தை மீறும் செயலாகும்.
இளைஞர்கள் பிரபல நடிகர்களின் செய்கைகளைப் பின்பற்றுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருபுறம் புகையிலை ஒழிப்பு குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, நடிகர் விஜய்யின் புதிய படத்தின் சுவரொட்டிகள் பொது சுகாதாரத்துக்கு பங்கம் விளைவிக்கும். இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது.
எனவே, சட்டத்தை மீறியதற்காக நடிகர் விஜய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில கண்காணிப்புக் குழுவுக்கு, இந்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் விஜய்க்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சிரில் அலக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.