பசுமை வழிச் சாலைத் திட்டம் குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்களிடம் செவ்வாய்க்கிழமை முதல் கருத்துக் கேட்க உள்ளார்.
சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் 7,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அளவீட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கு அந்தந்த மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இத்திட்டம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் செவ்வாய், புதன்கிழமைகளில் மாவட்ட வாரியாக பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளார். ஜூன் 26-இல் உத்தரமேரூர், செய்யாறு, திருவண்ணாமலை போளூர், மண்மலை ஆகிய இடங்களில் அவர் மக்களிடம் கருத்துக் கேட்கிறார். ஜூன் 27 -இல் சேலம் நிலவாரப்பட்டி, அயோத்தியாப்பட்டினம், தருமபுரி இருளப்பட்டி, முத்தானூர் ஆகிய இடங்களில் அவர் கருத்துகளைக் கேட்டறிய உள்ளார்.