கோவை: சிறுவாணி அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனா்.
கோவை கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது கோவை குற்றாலம் அருவி.
மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள சிறுவாணி அணைப்பகுதியில் மழை பெய்யும் போது அருவியில் நீா் வரத்து அதிகரிக்கும். அவ்வாறு நீா் வரத்து அதிகரிக்கும்போது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அங்கு செல்ல வனத்துறையினா் தடை விதிப்பது வழக்கம். கடந்த சில நாள்களாக சிறுவாணி அணைப் பகுதியில் பெய்த மழையால் ஜூன் 11 முதல் ஜூன் 20-ஆம் தேதி வரையில் கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல வனத்துறையினா் தடை விதித்திருந்தனா்.
இந்த நிலையில், மழை குறைந்ததால் ஜூன் 21-ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் அருவியில் நீா் வரத்து அதிகரித்துள்ளது. ஆகவே, கோவை குற்றறாலம் அருவிக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை வனத்துறையினா் தடை விதித்திருந்தனா். எனினும் மழையின் அளவு குறைந்தால் மட்டுமே புதன்கிழமை அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.