உதகை அருகே பேரிக்காய்களை ருசிக்க பகலில் கரடிகள் முகாமிட்டுள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், உதகை, தொட்டபெட்டா அருகிலுள்ள புதுக்காடு கிராமத்தில் அதிக அளவில் பேரி மரங்கள் உள்ளன. தற்போது பேரிக்காய் சீசன் என்பதால் அப் பகுதியில் உள்ள மரங்களில் அதிகளவில் பேரிக்காய்கள் காய்த்துள்ளன. அவற்றை ருசிக்க கரடிகள் வரத் துவங்கியுள்ளன.
பேரிக்காய் மரங்கள், தேயிலைத் தோட்டங்களின் நடுவே சில கரடிகள் நடமாடுவதை செவ்வாய்க்கிழமை கண்ட தொழிலாளர்கள் அவற்றை விரட்ட முயன்றனர். அப்போது, கரடிகள் தொழிலாளர்களை விரட்டியதால் அச்சம் அடைந்து தேயிலைப் பறிப்பதை நிறுத்திவிட்டு ஓட்டமெடுத்தனர்.
அப் பகுதி விவசாயிகள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினர் கரடி நடமாடும் பகுதியில் ஆய்வு செய்தனர். மேலும், கரடிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். வனத்துறையினர் தனிக் குழு அமைத்து கரடிகளைக் கண்காணிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.