சென்னை: மக்களாட்சி மலர வேண்டும் என்றால் மாணவர்கள்தான் அதனை முடிவு செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் சென்னை கேளம்பாக்கம் அருகேயுள்ள காலவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி வியாழன் அன்று நடந்தது.அப்பொழுது மாணவர்கள் மத்தியில் கமல் பேசியதாவது:
அரசியல் என்பது உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் சக்தியாக உள்ளது. அரசியலை கூர்ந்து கண்காணிக்க வேண்டும். வெறுமனே வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நான் பள்ளிப்படிப்பை கூட தாண்டாதவன். பள்ளிப்படிப்பை தாண்டாத என்னை கலைதான் காப்பாற்றியது.
அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். மக்களாட்சி மலர வேண்டும் என்றால் அதனை மாணவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நமது வீட்டுச் சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை ஏன் கொடுக்கத் தயங்க வேண்டும்? மய்யம் என்பது நடுவில் இருந்து பார்த்து நேர்மையாக எடுக்கும் முடிவு. அப்படி பார்த்தால் மட்டுமே அனைத்தும் விளங்கும். மய்யம் என்பதை தராசின் நடுவில் உள்ள முள் போன்று நீங்கள் கருதலாம்.
இவ்வாறு கமல் பேசினார்.