சென்னை: சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலிலேயே மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது
சென்னை கே.கே.நகரில் மீனாட்சி மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் அஸ்வினி என்ற பெண் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இன்று கல்லூரி வாசலில் அஸ்வினி நடந்து வந்து கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அஸ்வினியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதன் காரணமாக அஸ்வினி மயங்கிச் சரிந்தார்.
அவரை உடனடியாக கூடியிருந்தவர்கள் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதே சமயம் அவரைக் கத்தியால் குத்திய வாலிபரை அங்கு இருந்தவர்கள் பிடித்து அடித்து உதைத்து கே.கே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அதேசமயம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்வினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அஸ்வினியின் தோழிகள் மற்றும் கல்லூரியில் விசாரணை நடைபெற்று வருகிறது.