தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 943 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சுகாதாரத் துறையின் சார்பில், சர்வதேச மகளிர் தின விழா சென்னை தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
இந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த விகிதம் அதிகரித்து, 1000 ஆண் குழந்தைகளுக்கு 943 ஆக உள்ளது.
மேலும் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவிக்கக்கூடாது என்ற சட்டத்தை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொற்றுநோய்கள்: தமிழகத்தில் கோடைக் காலத்திலும் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கொசு ஒழிப்புப் பணிகள் தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.
மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன. உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.