விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே நியாய விலைக் கடை முன் விளையாடிய 3 வயது பெண் குழந்தை மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தது.
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி சந்தியா. இவர்களது குழந்தைகள் மதியழகன், பிரியதர்ஷினி (3).
அதே ஊரில் வசித்து வரும் தனது தங்கை சசிகலாவின் வீட்டில் பிரியதர்ஷினியை விட்டு விட்டு, சந்தியா தனது கணவருடன் வெளியூருக்குச் சென்றார். குழந்தையை அழைத்துக் கொண்டு நியாய விலைக் கடைக்கு பொருள்கள் வாங்குவதற்காக வியாழக்கிழமை சென்றார்.
அந்தப் பகுதியிலுள்ள நூலகக் கட்டடத்தில் நியாய விலைக் கடை தாற்காலிகமாக இயங்கி வருகிறது. கடையின் முன் குழந்தையை விட்டு விட்டு சந்தியா பொருள்களை வாங்குவதற்கு உள்ளே சென்றார்.
கடையின் முன் விளையாடிக் கொண்டிருந்த பிரியதர்ஷினி, அங்கிருந்த மின்சார எர்த் வயரை தொட்டதாகத் தெரிகிறது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் குழந்தை பிரியதர்ஷினி மயங்கி விழுந்தது. உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பிரியதர்ஷினியை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.