நீலகிரி மாவட்டம், குன்னூரில் காந்திபுரம் , பேரக்ஸ் வனப் பகுதிகளில் தீப் பிடித்ததால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனப் பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துகள் நிகழ்கின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை இரவு, குன்னூரில் காந்திபுரம் பகுதியிலும், திங்கள்கிழமை காலை பேரக்ஸ் பகுதியிலும் வனத்தில் தீ பிடித்தது. காற்றின் வேகம் குறைவாக இருந்ததால் தீ பரவவில்லை. சற்று நேரத்தில் தீயணைந்துவிட்டது.
குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் நஞ்சப்பன் சத்திரம், பகாசூரன் மலை, பேரக்ஸ், வண்டிச்சோலை உள்ளிட்ட வனப் பகுதிகளில் திடீரென தீப்பிடித்து எரிவதால், அரிய வகைத் தாவரங்கள், மரங்கள் அழிந்து வருகின்றன. வனத் தீ குடியிருப்புப் பகுதிகளுக்குள் பரவாமல் இருக்க தீத்தடுப்புக் கோடுகளை அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.