சென்னை: உலகத்திலேயே முதல் பகுதி நேர அரசியல்வாதியாக இருப்பவர் ஆன்மீக ஞானியான நண்பர் ரஜினிகாந்த்தான் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
ஆன்மீக பயணமாக இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனது நண்பரும், நடிகருமான அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக கூறினார்.
அத்துடன் நான் இங்கு ஆன்மிக பயணம் வந்துள்ளேன்; அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை, நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி அல்ல, என் கட்சி பெயர் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் உலகத்திலேயே முதல் பகுதி நேர அரசியல்வாதியாக இருப்பவர் ஆன்மீக ஞானியான நண்பர் ரஜினிகாந்த்தான் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் புதனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவரிடம், 'நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி அல்ல' என்ற ரஜினியின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
உலகத்திலேயே முதன் முறையாக பகுதி நேர அரசியல்வாதி என்ற விஷயத்தை ரஜினி அறிமுகம் செய்துள்ளார். இதற்கு முன்பு அப்படி யாருமே இருந்தது கிடையாது. நாம் எல்லோரும் அரசியல்வாதி என்ற பதத்தை கேள்விப்பட்டுள்ளோம். அது அரசியல் அதிகாரம், அரசாட்சி செய்வது என்பதாக இருந்துள்ளது. ஆனால் இது வித்தியாசமாக உள்ளது.
இப்படி உலகத்திலேயே முதல் பகுதி நேர அரசியல்வாதியாக இருப்பவர் ஆன்மீக ஞானியான நண்பர் ரஜினிகாந்த்தான். போகப் போக நான் அரசியலில் 'கேஷூவல் லேபர்' ஆக இருக்கிறேன் என்று கூறுவார் போல.
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.