சென்னை: சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த டேனி, தனது மனைவி ப்ரீத்திக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்தபோது, எதிர்பாராதவிதமாக கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியானார்.
டேனி - ப்ரீத்தி தம்பதிக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று இரவு டேனி, தனது மனைவிக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் வேகமாக ஓடி மற்றொரு கார் மீது மோதி, பின்பக்கமாக வந்ததில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பவித்ரா (5) என்ற சிறுமி மீது மோதியது.
பலத்த காயமடைந்த பவித்ரா, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து அறிந்து உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர், ப்ரீத்தியை கைது செய்தனர். அவர் மீது கவனக்குறைவாக செயல்பட்டு விபத்தை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.