முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் குற்றப் பிரிவு ஏடிஜிபி அம்ரேஷ் புஜாரி செவ்வாய்க்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், அவர்கள் வீட்டில் பணியாற்றியவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், அரசு மருத்துவர்கள் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அழைப்பாணையின்படி, விசாரணை ஆணையத்தில் சசிகலா திங்கள்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
அம்ரேஷ் புஜாரி ஆஜர்: இந்நிலையில், அழைப்பாணையின்படி, குற்றப் பிரிவு ஏடிஜிபி அம்ரேஷ் புஜாரி விசாரணை ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். காலை 10.30 முதல் 12 மணி வரை அம்ரேஷ் புஜாரியிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.
உளவுத் துறை ஐ.ஜி.யாக இருந்தவர்: கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, உளவுத் துறை ஐ.ஜி.யாக அம்ரேஷ் புஜாரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக, முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம், சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுத் தலைவர் ஜே.கே. திரிபாதி ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.