தலைமைக்கு எதிராக கருத்து: முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி அதிமுகவிலிருந்து நீக்கம்
சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது
அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் முன்னாள் எம்.பியான கே.சி.பழனிசாமி. இவர் திடீரென அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக வெள்ளி மாலை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
வெள்ளியன்று காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கே.சி.பழனிசாமி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தினைப் பற்றிய கேள்விக்கு, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அதிமுகவும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிக்கும்'' என்னும் பொருள்பட பதிலளித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தலைவர்களும் கட்சியின் மேலிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் கே.சி.பழனிசாமியின் இந்த கருத்து அதிமுக தலைமையினை சங்கடத்துக்குள்ளாக்கியது.
அதன் விளைவாகவே இந்த கட்சி நீக்கம் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.