வட தமிழகத்தில் அநேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது:
லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவிழந்துள்ளது. இதற்கிடையில், கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும், தென்னிந்தியப் பகுதியில் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, வடதமிழகத்தின் அநேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உண்டு. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார் பாலச்சந்திரன்.
கோவிலாங்குளத்தில் 40 மி.மீ. மழை: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 வரையிலான கடந்த 24 மணிநேரத்தில், விருதுநகர் மாவட்டம், கோவிலாங்குளத்தில் 40 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 30 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.