சென்னை: பூச்சிகள் இருந்த மதுபான பாட்டிலை வாங்கிய நபருக்கு அபராதம் வழங்க டாஸ்மாக் மற்றும் ஷா வாலாஸ் நிறுவனங்களுக்கு நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு பி.எஸ். சரவணன் என்பவர், சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வாங்கிய பிளாக் விஸ்கி என்ற மதுபானப் பாட்டிலில் பூச்சிகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பாட்டிலின் மூடியை திறக்காமல், அதனை பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பினார். இது குறித்து நுகர்வோர் தீர்ப்பாயத்தையும் நாடினார்.
பரிசோதனையின் முடிவில், இந்த பூச்சிகள் விஷத்தன்மை கொண்டது அல்ல, அதே சமயம், ஈ உள்ளிட்ட சில பூச்சிகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அதே சமயம், மதுபான நிறுவனம் சார்பில் அந்த பாட்டில் திறக்கப்படவேயில்லை என்பதால், அதனால் மதுபாட்டிலை வாங்கியவருக்கு எந்த உடல் நலக் குறைவும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வாதிட்டது.
இதனை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாயம், பூச்சிகள் இருந்த மதுபானப் பாட்டிலை வாங்கிய நுகர்வோருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.