தமிழகத்தில் அதிமுக, திமுக இடையே ரகசிய உடன்பாடு உள்ளது என லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் குற்றம்சாட்டினார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கீழகாவட்டாங்குறிச்சியில் லட்சிய திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: ஸ்டாலினுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது.
அதனால் தான் ஸ்டாலின் கல்லூரிக்கு செல்வது போல சட்டப்பேரவைக்குச் சென்று வருகிறார். டிடிவி தினகரன் ஆரம்பித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் திராவிடத்தையும், அண்ணாவையும் சேர்க்காதது கண்டனத்துக்குரியது. ஈ.பி.எஸ் மற்றும் ஓபிஎஸ்-க்கு தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி எனக்கு நல்ல நண்பர்.
தற்போது காவிரி பிரச்னைக்காக எம்.பி-க்களை ராஜிநாமா செய்யச்சொல்லும் ஸ்டாலின், மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது, ராஜிநாமா செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.