காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உள் தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் சனிக்கிழமை ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவியது. இது தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக, உள்தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும். கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைபெய்யும். சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றார் அவர்.
தென்காசியில் 70.மி.மீ...: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான, கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் 70 மி.மீ., ஆய்க்குடியில் 60 மி.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, செங்கோட்டையில் தலா 40 மி.மீ., திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.