சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல் நிலை தொடர்பாக குளோபல் மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை வெளிட்ட செய்திக்குறிப்பு: "கடும் நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக நடராஜன் (74) வெள்ளிக்கிழமை (மார்ச் 16) அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது; அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது' என்று மருத்துவமனையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லீரல்-சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை: கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு,நுரையீரல் அழற்சி ஆகிய பிரச்னைகள் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் முகமது ரேலாதலைமையிலான மருத்துவக் குழுவினர் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதியன்று நடராஜனுக்கு ஒரே நேரத்தில் கல்லீரல்-சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர்.
கல்லீரல் பாதிப்பு மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவக் கண்காணிப்பு மைய இயக்குநர் டாக்டர் கே.இளங்குமரன் தீவிர மருத்துவக் கண்காணிப்பின்கீழ் குணமடைந்த அவர், மருத்துவமனையிலிருந்து கடந்த நவம்பர் மாதம் வீடு திரும்பினார். தற்போது கடும் நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக அவர் மீண்டும் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைகோ, திருமாவளவன் சந்திப்பு: உடல் நலக் குறைவு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜனை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.