கைதிகளுக்கு செல்லிடப்பேசி, கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட பொருள்களை வழங்க உடந்தையாக இருக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி க.ஜெயபாரதி தெரிவித்தார்.
வேலூர் சரக சிறைத்துறை டிஐஜியாக பணியாற்றி வந்த பாஸ்கரன், பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி சரக டிஐஜியாக பணியாற்றிய க.ஜெயபாரதி வேலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட்டார். தொடர்ந்து, க.ஜெயபாரதி வேலூர் சரக சிறைத்துறை டிஐஜியாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேலூர் மத்திய சிறையில் முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கைதி தப்பிச்சென்றதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சிறைத் துறையில் கூடுதலாக 1,015 காவலர்கள் பணியில் சேர உள்ளனர். அவர்கள் பணியில் சேர்ந்தவுடன் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
சிறையில் கைதிகள் இறப்பது அதிகரித்து வருகிறது. எனவே, கைதிகளுக்கு மனஅழுத்தத்தைக் குறைக்க ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் யோகா பயிற்சி, மனநல ஆலோசனைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.
வேலூர் சிறையில் கைதிகள் செல்லிடப்பேசிகள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், 2 ஜாமர் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், செல்லிடப்பேசிகளின் பயன்பாடு குறைந்துள்ளது. எனினும், செல்லிடப்பேசி, கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட பொருள்களை கைதிகளுக்கு வழங்க உடந்தையாக இருக்கும் காவலர்கள் மீது இடைநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கெனவே சிறை வளாகத்தில் நன்னடத்தை கைதிகள் மூலம் விவசாயப் பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. இதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். முன்னதாக, க.ஜெயபாரதிக்கு சிறைத் துறை போலீஸார் வாழ்த்து தெரிவித்தனர்.